காந்தி பார்க்கும் திசையில் தான் கூடினோம் தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தொடர்ந்து கொல்லபடும் பிரச்சனைகளை பற்றி கலந்தாலோசிக்க. ட்விட்டரில் TBCDக்கு திடீரென்று இந்த எண்ணம் உதித்தது ஏன் தமிழக மீனவர்கள் கொல்லபடுவதை ஊடங்கங்களும் அரசியல் கட்சிகளும் மௌனமாகவே எதிர்கொள்கிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள். குறிப்பாக தேசிய ஊடங்களில் ஆஸ்திரேலியாவில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டாலோ லண்டனில் பஞ்சாபிகள் பிரச்சனை என்றாலோ அமெரிக்க இராணு்வத்தில் பனி புரியும் சீக்கியர்களுக்கு பிரச்சனை என்றாலோ பெரும் கூச்சல் இடுகிறார்கள். தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் கண்டு கொள்வதே இல்லை. இது ஏன் ஒரு தேசிய பொது பிரச்சனையாக விவாதிக்க பட கூடாது எனும் எண்ணம் ட்விட்டரில் #tnfishermanஐ தோற்றுவித்தது. பின் நிகழந்தது தமிழ் இணைய பரப்பில் இதுவரை நிகழா அற்புதம். அலையலையாய் ட்வீட்டுக்கள் குவிந்தன. பெருமழையாய் பெய்து தொலைத்தார்கள் தங்கள் உள்ள குமுறல்களை. அழுது அரற்றி வசை பாடி ஊழி கூத்தாடி தங்கள் குமுறல்களை தனித்து கொண்டார்கள். தொடர்து நான்கு நாட்களுக்கும் மேலாக ட்விட்டர் ட்ரெண்டில் #tnfishermanஐ முதலிடத்தில் இருத்தி காட்டினார்கள் இணையத்தமிழர்கள். வட இந்திய ஊடங்கங்கள் தலை திருப்பினார்கள் காது கொடுத்தார்கள். ஒரு பொருட்படுத்ததக்க விஷயமாக கருதாத ஒன்றை ஒ! இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா என கண் விரித்தார்கள். எதற்கு TBCD ஆசைப்பட்டாரோ அது நடந்து விட்டது. நடந்ததும் முட்டு சந்தில் தொடர்ந்து இடித்து கொண்டிருக்கும் ஒரு ஆற்றாமை மெல்ல ஊடுருவியது எங்களில் சிலருக்கு. இதை இன்னும் விரித்து செல்லவும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவும் ஒரு தேவை உருவாகி விட்டதை இடித்து கொண்டிருந்த சிலர் உணர்ந்தோம். நண்பர் கவிராஜன் நாம் மெரினாவில் சந்திக்கலாம் என ட்வீட்ட ஜ்யோவராம் எங்கே எப்போ என கேட்க ஜனவரி முப்பது மாலை 5.30 காந்தியிடம் சரண் புகுவோம் என்றது அடியேன். ஒரு திறந்த அழைப்பாய் இந்த செய்தி பரவலாக சென்றடைந்து நிறைய பேர் வருவதற்கு தொலைபேசியிலும் ட்வீட்டுகளிலும் விருப்பம் தெரிவித்தார்கள்.
சற்றேரத்தாழ ஆறு மணி வாக்கில் கணிசமான பதிவர்களும் ட்வீட்டர்களும் கூடிய பின் ஜாகை மணலுக்கு கடத்தப்பட்டது. வாகாக அமர்ந்த பிண் தோழர் வளர்மதி ஒருங்கினைப்பு செய்ய ஒப்புகொணடு துவங்கிய கலந்துரையாடல் சில நேரங்களில் விவாதமாகவும் உருவெடுத்தது. முதலாவதாக உரையாடியது பிரச்சனையற்றதாக நம்பப்பட்ட ஒன்றை தொடர்ந்து இணையத்தில் பேசி முதல் முறையாக அதன் மீது கவனகுவிப்பை நிகழ்த்தி காட்டி இது ஒரு பிரசன்னை என புரிய வைத்த இணையத்தமிழர்களின் பங்களிப்பு பற்றி, இது ஒரு முன்னோடி செயல்பாடு என்பதால் பங்களிப்பு செய்த அத்தனை பேருக்கும் நன்றி பகிரபட்டது. மக்கள் காய்ந்த சருகுகள் போல் இருக்கிறார்கள் ஒரு சிறு பொறி போதும் அவர்கள் பற்றி எரிய எனும் மார்க்சிய படிப்பினையை நேரடியாக உணர்த்தியது இந்த சம்பவம். அனால் இதன் எல்லை இணையயுலகம் மட்டுமே என்பதும் புரிந்தே இருக்கிறது. அடுத்த கட்டமாக இந்த கோபத்தை வெகு ஜனங்களிடம் எப்படி எடுத்து செல்வது, அரசுக்கு எப்படி நெருக்கடி கொடுப்பது, இந்த அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அழுகிய மீன்களை பொட்டலம் கட்டி அனுப்பலாமா் என்பது போன்ற விஷயங்கள் விவாதிக்கபாட்டன. வரும் தேர்தல் வரை இந்த பிரச்சனையை நீர்த்து போக விடமால் இயங்குவது போன்ற கருத்துக்கள் ஏற்று கொள்ளப்பட்டன.
இதற்கான ஒருகினைப்பை செய்வது எப்படி என்று தொடர்ந்து பேசினோம். இடையில் பல தளங்கள் இயங்குவது ஒருகினைப்பை சாதியமாற்றதக்குகிறது எனும் ஒரு கருத்தும் முன் வைக்கப்பட்டது. உதாரணத்துக்கு http://www.savetnfisherman.org/ மற்றும் http://www.savetnfishermen.org/என இரு தளங்கள் இயங்குவது சுட்டி காட்டப்பட்டது. அது ஒரு பிரச்சனை அல்ல இப்படி பலரின் பங்களிப்பு இருப்பது நல்லது எனவும் ஆயினும் அவர்கள் யார் அறிந்து தொடர்பு கொண்டு இணைந்து செயல்படுவத்தின் சாத்தியங்களை பரிசிளிக்கலாம் எனும் முடிவு எட்டப்பட்டது. அனால் ட்விட்டரில் பல டாகுகள் வருவது தவிர்க்கப்படவேண்டும் எனவும் #tnfishermen #nagapattinam போன்ற டாகுகள் தவிர்த்து #tnfishermanஐ மட்டுமே முன்னிலை படுத்தவும் எல்லோரும் ஒருமனதாக ஏற்று கொண்டோம். (துரதிஷ்ட்டவசமாக இன்று வெளியான டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தி #tnfishermen டாகை உபயோகப்படுத்தி இருக்கிறது.) இடையில் வந்த இந்த பிரச்சனை தொடர்பாக நேரடியாக மந்திரிகளை சந்திப்பது மனு கொடுப்பது போன்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டு முலையிலேயே நிராகரிப்பட்டது. அதை குழுமம் செய்ய வேண்டாம் எனவும் தனி நபர்கள் தங்களுக்கு இயன்ற தொடர்புகளை பயன்படுத்தி இதை செய்யலாம் என ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்களை சமயோசிதமாக பயன்படுத்தி கொள்வது என்பதை ஏற்று கொண்டோம். சுஷ்மா ஸ்வராஜ் வருகையின் பொழுது அவர்களை சந்தித்து தரவுகளை வழங்கி இது ஒரு தேசிய பிரச்சனையாக அணுக கேட்டுகொள்வது, தேர்தல் நேரத்தில் இதை அரசியல் படுத்துவது போன்ற கருத்துக்கள் எட்டப்பட்டன.
மீடியாக்களின் மிக மோசமான செயல்பாடுகளை தோலுரித்து காட்டுவது. குறிப்பாக ‘தி ஹிந்து’ போன்ற பத்திரிக்கைகள் இலங்கை அரசின் செய்தி தொடர்பு துறை போல் செயல்படுவதை வெகுமக்களுக்கு புரிய வைக்க வேண்டும், இந்த பத்திரிக்கைகளை புறக்கணிக்க சொல்லி பிரசார இயக்கம் மேற்கொள்வது என விரிந்தது பேச்சு. குறிப்பாக எல்லோரும் தி ஹிந்து வின் மேல்தான் அதிக காண்டுடன் இருந்தார்கள் என சொல்லலாம். முக்கியமாக நண்பர் ரோசாவசந்த் அது ஒரு இடது சாரி பத்திரிகை எனும் பிம்பம் உடைக்க பட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க எல்லோரும் ஏற்று கொண்டோம். தொடர்ந்து இதற்க்கு ஒரு மீடியா வாட்ச் போன்ற ஒரு செயற்க்குழு அமைப்பது பற்றியும் சில முடிவுகள் எட்டப்பட்டன.
மெல்ல உரையாடல் நிகழ்ந்த கொலைகள் கொடுஞ்செயல்களை சார்ந்த தரவுகள் நம்மிடம் இல்லை என்பது பற்றியும் தப்பி பிழைத்த மீனவர்களிடம் இருந்து எந்த செவ்வியும் காணொளியும் எடுக்கப்படாதது பற்றியும் இருக்கும் தகவல்கள் அரை தகவல்களாக இருப்பது பற்றியும் இதை ஒருங்கிணைத்து ராமேஸ்வரம் வேதாரண்யம் பகுதிகளில் உள்ள மீனவ சமூகத்தினரிடம் களப்பணி செய்து இந்த தரவுகளை திரட்டுவது பற்றியும் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இணையம் மற்றும் யூடியூப் போன்ற தளங்களின் சாத்தியப்பாடுகளை முழுக்க பயன்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என ஒப்புக்கொள்ளப்பட்டது. அரசோ காவல்த்துறையோ செய்ய மறந்த மறுத்த இதை நாம் தான் முன்னெடுத்து செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த பிரச்சனையில் தொடர்ந்து அரசோ காவல்த்துறையோ மீனவர்கள் எல்லை தாண்டி விட்டார்கள் எனும் கருத்தை முன் வைப்பதை ஏற்று கொள்ள முடியாது எனவும் இது கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய ஒரு நிலைப்பாடு என தோழர் பத்ரி பதிவு செய்தார்.
பத்ரி தொடர்ந்து பேசுகையில் தமிழ் மீனவன் மற்றும் மீனவன் என்று இரு வகை அடையாள சிக்கல்கள் இருப்பதுவும் இந்திய அரசு இவர்கள் பிரச்சனையை கண்டு கொள்ளாததற்கு தமிழன் என்பது காரணம் அல்ல அவர்களின் வர்க்கமே காரணம் எனும் கருத்தை முன் வைத்தார். கடற்கரைகளை பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்க இவர்கள் தடையாய் இருப்பதுவும் அவர்களை அச்சுறுத்தி அவர்கள் வாழ்விடத்தில் இருந்து அகற்றுவதற்க்கான ஒரு பெரும் திட்டமிடல் இந்த கொலைகளின் பின்னணியில் செயல்படலாம் எனும் கருத்து முன்வைக்கப்பட்டது. மாற்றாக இதில் இரு வகை அடையாலங்களினாலும் தமிழ் மீனவன் பாதிக்கப்படுகிறார்கள், சிங்களர் தாக்குவதற்கு தமிழன் எனும் அடையாளமும் இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு தமிழன்/மீனவன் எனும் இரு வகை அடையாளமும் காரணியாக செயல்படுவதை பெரும்பான்மையாக அமோதித்தார்கள். மீனவச்சமூகம் பொது சமூகத்தில் இருந்து விலகி இருப்பது ஒரு கருத்தாக முன்வைக்கப்பட்டு பெரும் விவாதமாக உருவெடுத்து உரையாடல் திசை மாறி செல்ல துவங்கியது. நீண்ட நேரம் இரு தரப்பும் ஒரு மைய்ய புள்ளியை எட்டாமல் இருந்து பின் அச்சமூகத்தை பற்றி தவறான புரிதலுக்கு நாம் விலகி இருப்பதுவும் ஒரு காரணம் எனவும் அவர்களின் சமூக பங்களிப்புகள், செயல்பாடுகள் வாழ்முறைகள் பற்றிய புரிதலுக்கு நாமும் நம்மை உட்படுத்திகொள்ள வேண்டும் என முடிவு எட்டப்பட்டது.
சட்டபூர்வ செயல்களை பற்றிய உரையாடலின் பொழுது வழக்குரைஞர் சாமிதுரை அவர்கள் இது விஷயமாக இதுவரை எடுக்கப்பட்ட சட்டபூர்வமான நடவடிக்கைகள் திரு.வைகோ அவர்களின் ‘குற்றம் சாட்டுகிறேன்’ புத்தகத்தில் உள்ள தரவுகள் பற்றி ஒரு நீண்ட உரை நிகழ்த்தினார். இதை மேலும் புரிந்து கொள்ள அடுத்த சனி/ஞாயிறில் ஒரு அரங்க கூட்டம் ஏற்பாடு செய்வதாக தோழர் பத்ரி ஒப்புகொண்டார். மேலும் தகவல்கள் ஒருகினைக்கபட்ட பின் சிறு அச்சு வெளியிடுகள் மற்றும் இணைய வெளியிடுகள் வெளியிடுவது பற்றியும் அவர் சில யோசனைகளை முன்வைத்தார். கூட்டம் களைவதற்கு சற்று முன் ஒரு கேள்வி வந்தது ‘கொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டால் இந்த குழுமம் களைந்து விடுமா அல்லது ஏற்கனவே கொல்லப்பட்ட பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நீதி வழங்க தொடர்ந்து போராடுவோமா’ என்று. கொலைகள் தடுக்கப்படவேண்டும் என்பது இந்த குழுமத்தின் முதன்மை செயல்பாடு எனவும் இது போன்ற பிரச்சனைகளில் தொடர்ந்து இயங்க வேண்டும் எனவும் மக்களுக்கு அநீதி நிகழும்பொழுதெல்லாம் கொதித்தெழும் நண்பர்கள் இக்குழுமத்தில் தங்களை இணைத்து கொள்ளலாம் என அறிவிக்கபட்டது. ஆடை நெய்வது போன்ற ஒரு பனி இது, மெல்ல பல்வேறு ரக நூல்களை எடுத்து தரம் பிரித்து இணைத்து உருவாக்குவது போல் கவனமாக செய்ய வேண்டும். மணல் துகள்கள் தட்டபட்டன. நம்பிக்கைகள் இணைக்கப்பட்டன. வங்கக்கடல் ஆர்பரித்து கொண்டிருந்தது. காந்தி வேறெங்கோ பார்த்துகொண்டிருந்தார், நாங்கள் களையும் பொழுது.
பி.கு.1: கலந்து கொண்ட பலரின் பெயர்கள் தெரியாததுவும், எனக்கு சிலரை நேரடியாய் அறிமுகம் இருந்ததுவும், சிலர் தீவிரமாய் பேசியதும் என் கவனத்துக்கு வந்தார்கள் என்பதுவும் மட்டுமே இந்த பதிவில் எடுத்தாளப்பட்டவர்களின் பெயர் காரணம்.இந்த பதிவில் இல்லாமல் இருந்தாலும் வந்தவர்கள் அனைவருமே முக்கியமானவர்கள் . அவர்கள் இல்லாமல் இக்கலந்துரையாடல் சாத்தியபட்டிருக்காது. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
பி.கு.2: மிக விரைவாக செயல்பட்டு டைம்ஸ் ஆப் இந்தியாவில் இந்த செய்தியை கொண்டு சேர்த்த அதிஷாவுக்கும் நன்றி.


>>> சரண் அவர்களுக்கு வணக்கம். கடற்கரை மீட்டிங்கில் பல நண்பர்கள் பேசியதை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. செயலில் இறங்கி இருக்கும் தோழர்களுக்கும் என் வாழ்த்துகள். சென்னையில் பெரிய எண்ணிக்கையில் நண்பர்கள் திரள்வார்கள் என்று எண்ணினேன். ஒருவேளை கால அவகாசம் குறைவாக இருந்தது கூட காரணமாக இருக்கலாம். அடுத்த முறை ஓரிரு நாட்களுக்கு முன்பே தெரிவித்து விட்டால் நிறைய பேர் வர ஏதுவாக இருக்கும். இப்படிப்பட்ட நல்ல நோக்கம் உள்ள சந்திப்பில் கலந்து கொண்டது எனக்கு மன நிறைவை தந்துள்ளது.
vetri adaiya uzhaippom.
இதன் தொடர்ச்சி எப்போது.ஒருநாள் முன்னதாக அறிவித்தால் நல்லது.TBCD யின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.